வலைப்பதிவர் சந்திப்பு - லீவ் லெட்டர்

1. ஞாயித்துக்கிழமையும் ஆணி பிடுங்க போயிட்டேன்

2. லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல கையைக் காட்டி நேராப் போய் மீடியன்ல முட்டிக்கிட்ட ஆட்டோனால ட்ராபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டேன்

3. நடேசன் பூங்காவுக்கு வழி கேட்டதுக்கு "அப்படி எதுவும் இங்க இல்ல. நடேசன் முதலியார் பார்க்"தான் இருக்குன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க.

4. கிண்டி ஹால்டா சிக்னல் ட்ராபிக் டைவர்ஷன்னால அந்த ஏரியாவையே நாலு முறை சுத்தி எங்கே போறோம்னே மறந்துபோய் வீட்டுக்கே திரும்ப போயிட்டேன்.

5. மாயக்கண்ணாடி ஹீரோவோட(பேரெல்லாம் சொல்ல மாட்டேன்) ஹேர் ஸ்டைல், டான்ஸ்லாம் பார்த்ததுல பயங்கர தலைவலி, காய்ச்சல். மயக்கம்

6. அப்பாவோட ஒன்னுவிட்ட தம்பியோட மாமனாரோட சின்ன பையனோட மச்சானோட மாமனார் செத்துபோயிட்டார்.

7. 'உன்னாலே உன்னாலே' படம் பார்த்து மனம் வெறுத்துப் போய் இழுத்து போத்து தூங்கிட்டேன்.

8. எப்பவும் போல இல்லாம சுத்தமான நல்ல பெட்ரோல் போட்டதுல பைக் இஞ்சின் சீஸ் ஆகி நின்னுப்போச்சு

9. டிக்கெட் எடுக்காம வந்ததால பனகல் பார்க் பஸ் ஸ்டாப்ல செக்கிங் இன்ஸ்பெக்டர் கிட்ட மாட்டிக்கிட்டேன்.

10. தாழ்தள சொகுசுப் பேருந்தின் ஆட்டோமெட்டிக் கதவு திறக்காததால வெளிய வர முடியாம ரெண்டு மணி நேரம் பஸ்ஸுக்குள்ளேயே இருந்தேன்.

இப்படியெல்லாம் மொக்கையான காரணம் ஏதுமில்லீங்க. "ஊருக்கு வந்து ஒரு மாசம் ஆச்சு. இந்த வாரம் வரலைனா பஞ்சாயத்தைக் கூட்டி வீட்டை விட்டு விலக்கி வச்சிருவேன்"னு எங்கப்பாரு போன் செஞ்சு மிரட்டினதால ஊருக்கு போயிட்டேன். :))

சந்திப்பு நல்லபடியா முடிஞ்சுதா? பங்குகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)



கூடல் நகர்

"மாப்ள, இப்பல்லாம் எந்த படமும் உருப்படியா வர்றதில்லடா. எதுவுமே சரியில்ல"

"டேய் வெண்ண! இதை என்னவோ நியூஸ் மாதிரி சொல்ற? பல வருஷமா இதைத்தானடா சொல்லிட்டிருக்கோம்! அடுத்த வாரமும் தியேட்டர் முன்னாடி நின்னுட்டு இதே டயலாக் தான் சொல்லப் போற!"

*****************************************************************

பரத் இரட்டை வேடம். பாவனா, சந்தியா இரு கதாநாயகிகள். வழக்கம் போல அழுதுபுலம்பும் அம்மா, அரசியல்வாதி வில்லன், வில்லன் வீட்டுல ஒரு நல்லவன் இதுமாதிரி நிறைய கதாபாத்திரங்கள், செண்டிமெண்ட் காட்சிகள், ஒரு பைட்டு, நாலஞ்சு பாட்டு.

அண்ணன் பரத் லெண்டிங் லைப்ரரில வேலை பார்க்கறவர். தம்பி அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் வேலை பார்ப்பவர். தம்பி அப்பப்ப வில்லனுக்கு எடுபிடி வேலை செய்வார். அண்ணன் வில்லன் பொண்ணு பாவனாவை கரெக்ட் செய்வார். விஷயம் வில்லனுக்கு தெரிஞ்சு அண்ணனை போட்டு தள்ளுவார். அவர் செத்த சோகத்துல பாவனா தொங்கிடுவாங்க. தம்பி தன் காதலி சந்தியாவுடன் சேருவதற்கு முன் வில்லனைக் கொன்று பழிதீர்ப்பார்.

இந்த அரதப்பழசான கதை தவிர படத்துல எதுவுமே சொல்லிக்கற மாதிரி இல்ல. ஆரம்ப காட்சிகளிலேயே படத்தோட பரிதாப நிலைமை தெரிஞ்சுடுது. இதுல வித்தியாசமா எடுக்கறோம்னு சைக்கிள், மொபெட், கார், ஆம்புலன்ஸ்ன்னு எல்லா வண்டிக்கு முன்னாடியும் கேமரா வச்சிடறாங்க. நல்ல வேளையா இப்ப இருக்க ட்ரெண்ட் மாதிரி கேமராவை அடிக்கடி ஆட்டாம இருக்கறதால தலைவலி வரல. பின்னணி இசை, பாடல்கள் பத்தி கேட்கவே வேணாம். நான் சொல்லவும் போறதில்ல.

இடைவேளைல படத்துல நிறைய ட்விஸ்ட் யோசிச்சோம். படத்தோட ஆரம்பத்துல ரெண்டு பரத்தும் சின்ன பசங்களா இருக்கும்போது சொந்த ஊர்ல விட்டுட்டு வந்த நாய்க்குட்டி, அவங்க குடும்ப பாட்டு ட்யூன்ல குரைச்சு அவங்க கூட சேரும்னு எதிர்பார்த்தோம். டைரக்டர் நாயை மறந்துட்டார் போல.

வில்லனை அண்ணன் கொன்னதும் தம்பியே மார்ச்சுவரில அந்த பிணத்தை அறுப்பார்ன்னு எதிர்ப்பார்த்தது பொய்க்கவில்லை :)) . அதுக்கப்புறம் சண்டையில தம்பியோட காதலி சந்தியா சாவாங்க. தம்பி பாவனாவை கல்யாணம் பண்ணிப்பார்ன்னு நினைச்சோம். அது நடக்கல.

பரத் ஏற்கனவே சென்னை காதல்னு ஒரு மொக்கைல நடிச்சார். இது சென்னை காதல் விட ரொம்பவே நல்ல படம்னாலும் இன்னும் ஒரு படம் இதே மாதிரி நடிச்சாப்போதும். பேக்-அப் பண்ணிடலாம்.

படம் முழுக்க திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுத்துவட்டாரத்துல எடுத்திருக்காங்க. திருப்பரங்குன்றம் நம்ம காலேஜ் ஏரியா. அதுதான் படத்துல ஒரே சந்தோஷம். பார்த்து ரொம்ப நாள் ஆன இடங்களை திரையில் பார்த்ததில் ஒரு திருப்தி.

டைரக்டர் நிறைய ட்ரை பண்ணியிருக்கார். ஆனா எதுவும் சரியா வரல. சீரியசான படமாகவும் இல்லாம, மசாலாவும் ஒழுங்கா இல்லாம மரணக்கடியான படமாயிடுச்சு. சீனு ராமசாமி இன்னொரு படம் எடுத்தா நாலு பேர்கிட்ட விமர்சனம் கேட்டுட்டுத்தான் படம் பார்க்க போகனும்.

படம் முடிச்சு தியேட்டர் வெளியே வரும்போது விகடன் மதன் முன்னாடி போயிட்டிருந்தார். ரொம்ப கூட்டமா இருந்ததால "அடுத்த வாரம் விஜய் டிவி விமர்சனத்துல கார்ட்டூன் வரையும்போது ஆடியன்ஸ் படத்தை வரைஞ்சு ரொம்ப பாவம்னு எழுதி எங்களைவச்சு காமெடி பண்ணிடாதீங்க மதன் சார்"ன்னு அவர்கிட்ட சொல்ல முடியல.



இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!?

"லாங் லாங் அகோ சோ லாங் அகோ சோ தட் நோ ஒன் கேன் சே அவ் லாங் அகோ" பாபா ஒன்பது விசித்திர குணங்களை எழுத சொன்னார். ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்ன வெட்டி ஒரு 5 எழுத சொன்னார். ஆபிஸ்ல தேவையில்லாத ஆணியெல்லாம் புடுங்கிட்டே இருக்கறதால கொஞ்சம் லேட்டாகிப்போச்சு. அதுக்கு முதல்ல மாப்பு கேட்டுக்கறேன்.

வியர்டு வியர்டுன்னு சொல்றாங்களே, நம்ம கிட்ட அந்த மாதிரி ஒரு வியர்டும் இல்லையேன்னு தான் நினைச்சேன். ஆனா இதை எழுத யோசிக்கும்போது தான் "உடம்பில் உரைகின்ற ஓருயிர் போல் உனக்குள் தானே நானிருந்தேன்"ன்னு எல்லா வியர்டும் வெளிய வருது. 9 எழுதலாமா? 5 எழுதலாமா? ரெண்டு பேருக்கும் இல்லாம பொதுவா (9+5)/2=7 எழுதலாமா? பதிவின் நீள அகலத்தைப் பொறுத்து எத்தனை வருதோ அத்தனை எழுதறேன் :))

முதல் வியர்டு முறைச்சுப் பார்க்கறது. பஸ்லயோ ஓட்டல்லயோ இல்ல எந்த பொது இடமா இருந்தாலும் எனக்கு பொழுதுபோகலைனா யாராவது ஒருத்தரை தேர்ந்தெடுத்து முறைச்சு பார்த்துக்கிட்டே இருப்பேன். அவரும் நம்மள கவனிக்க ஆரம்பிச்சா போதும் அவரை விடவே மாட்டேன். நாம குறுகுறுன்னு அவரையே பார்க்கறதுல அவங்களும் ரியாக்ஷன் காட்ட ஆரம்பிச்சுடுவாங்க. அடிக்கடி திரும்பி பார்ப்பாங்க. இல்ல திரும்ப முறைப்பாங்க. முகத்தைத் திருப்பிப்பாங்க. இப்படி விதவிதமா ரியாக்ஷன் வரும். நல்லா ஜாலியா இருக்கும்.

அப்புறம் கோபம். காட்டுத்தனமா கோபப்படுவேன். கோபம் வந்து யார் என்னன்னு பார்க்காம கத்திடுவேன். கோபத்தை கண்ட்ரொல் பண்ணவெல்லாம் தெரியாது. உடனே முகத்துல ரியாக்ஷன் காட்டிட்டுவேன். அப்புறம் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அவங்ககிட்டயே போய் "சாரிங்க, நான் ரொம்ப கத்திட்டேன். கோபம் வந்தா நான் என்ன கத்தறேன்னே தெரியாது. மன்னிச்சுருங்க"ன்னு ஒரு அரை மணி நேரம் மொக்கை போடுவேன். கோபம்+அதற்குப் பின்னான மொக்கை ஒரு முக்கியமான் வியர்டு :))

கனவு. நான் ஒரு முறை தூங்கிட்டா என் கனவை நானே நிறுத்த மாட்டேன் :)). கனவுல என்னென்னவோ வரும். துப்பறியும் கதை, செண்டிமெண்ட், திரில்லர், லவ் ஸ்டோரி, கிரிக்கெட்ன்னு எல்லா டைப் கதையும் வரும். பல பிரபலங்கள் வருவாங்க.பல பேரை கனவுல கொன்னுருக்கேன். செத்துப்போன பல பேர் உயிரோட வந்திருக்காங்க.

இன்னொரு வியர்டு - ஏதாவது பஸ்ல ஏறி உட்கார்ந்த பிறகு அது சரியான பஸ் தானான்னு சந்தேகம் வந்துடும். இன்னொரு முறை கீழே இறங்கி போர்டை பார்த்தாலோ இல்லை டிரைவர்-கண்டக்டர்கிட்ட கேட்டாலோ தான் நிம்மதியா இருக்கும். ஏறும்போதே போர்டெல்லாம் பார்த்துதான் ஏறுவேன். ஆனாலும் சீட்டுல உட்கார்ந்ததும் இந்த சந்தேகம் வந்துடும். இத்தனைக்கும் இதுவரை பஸ் மாறி எங்கேயும் போனதில்ல. அப்படியிருந்தும் ஏன்னு தெரியல.

இன்னொரு பஸ் வியர்டு ஆசை - ஏதாவது பஸ்ல போயிட்டே இருக்கனும். விடுமுறைல சென்னைல இருக்க மாமா வீட்டுக்கு வந்தா வீட்டுலயே இருக்க மாட்டேன். மடிப்பாக்கத்துல இருந்து ஏதாவது ஒரு பஸ் ஏறி எங்கேயாவது போய் அங்கிருந்து வேற இடம் போய் இப்படியே நாலைஞ்சு மணி நேரம் பஸ்லயே சுத்திட்டு சாப்பிட வீட்டுக்கு வந்துடுவேன். இன்னொரு நிறைவேற்றப்படாத வியர்டு ஆசை - மதுரை-காஞ்சிபுரத்துக்கு டவுண் பஸ்லயே மாறி மாறி வர்றது. இதுவரை அதிகபட்சம் 5 பஸ் மாறி போயிருக்கேன். அவ்வளவுதான். மதுரை-நாகர்கோயிலுக்கும் ஒரு முறை 7 பஸ் மாறி போயிருக்கோம்.

சினிமா பார்க்கறது வியர்டு இல்லைனாலும் அதுவும் நமக்கு ஒரு முக்கியமான தகுதி இல்லையா? :)) எல்லா படமும் பார்த்துடுவோம். படம் மரண மொக்கையா இருந்தாலும் சரி. எந்த மொழியா இருந்தாலும் சரி. விடறதில்ல. 'உலக சினிமா' பார்க்கறோம்னு ஏதாவது டிவிடி எடுத்துட்டு வந்து படத்துல என்ன நடக்குதுன்னே தெரியாம பெப்பரப்பேன்னு முழிச்சுட்டு இருக்கறதும் செம காமெடியா இருக்கும்.

அட்வைஸ் பண்றது ரொம்ப பிடிக்கும். காலேஜ்லயும் சரி அப்புறம் வேலைலயும் சரி பசங்களோட புலம்பல்களுக்கெல்லாம் நாம தான் வடிகால். எக்கச்சக்கமா புலம்புவாங்க. நானும் பொறுமையா எல்லாத்துக்கும் 'உம்' கொட்டி கேட்டுட்டு கடைசில 'விட்றா மச்சி..இதெல்லாம் ஜகஜம்'னு ஆரம்பிச்சு அவன் புலம்பினதுக்கு ஏத்தமாதிரி மொக்கையை திரும்ப கொடுத்துடுவேன்.

சாப்பாடு - சாப்பாட்டுல என்னடா வியர்டுன்னு கேட்கலாம். ஆனா இருக்கே :)). ஒவ்வொரு வாரமும் ஒரு சாப்பாடு ஐயிட்டத்தை தேர்ந்தெடுத்து அந்த வாரம் முழுக்க அதையே வெவ்வேறு ஓட்டல்ல சாப்பிட்டு அவங்க தகுதி அடிப்படைல ஓட்டல்களுக்கு ரேட்டிங் கொடுப்பேன். கிட்டத்தட்ட எல்லா முக்கியமான சாப்பாடு ஐயிட்டத்துக்கும் இதுமாதிரி 'சிறப்பு வாரம்' கொண்டாடியிருக்கேன் :)).

இன்னொரு சாப்பாடு வியர்டு எங்கே சாப்பிட்டாலும் அவங்க போடறதை அப்படியே சாப்பிடுவேன். உப்பு குறைச்சலா இருந்தாலோ காரம் அதிகமா இருந்தாலோ கண்டுக்க மாட்டேன். கேட்கவும் மாட்டேன். அது அவங்க வீட்டு டேஸ்ட்ன்னு நான் என் கடமையை செஞ்சுடுவேன். அதுக்கப்புறம் அவங்க குறையை கண்டுபுடிச்சு "எப்படி இதை சாப்பிட்ட? என்னாலயே சாப்பிட முடியலையே"ன்னு கேட்டு அசடு வழிய நின்ன அனுபவமும் நிறைய இருக்கு.

சாப்பாட்டுல காபி சொல்லாம இருக்க முடியுமா? ஏற்கனவே என் ஆறு பதிவுல சொன்னா மாதிரி( டேய், நீ எழுதினதை எல்லாரும் மனப்பாடம் பண்ணியா வச்சிருக்கோம்? சொல்ல வந்ததை சொல்லுடா-ன்னு நீங்க கேட்கறது என் காதுல விழல) ஒவ்வொரு வீட்டு காபிக்கும் தனி சுவை உண்டு. ஒவ்வொரு ஓட்டல் காபிக்கும் தனி மணம் உண்டு. சோமபானம் சுராபானம் ரேஞ்சுக்கு காபியும் ஒரு சூப்பர் பானம் தான் :))

இன்னொரு வியர்டு - எங்கயாவது ஊர் சுத்த போனாலோ டூர் போனாலோ வீட்டுல சொல்லவே மாட்டேன். அவங்களா போன் பண்ணாலும் வேற ஊர்ல இருக்கறதை சொல்ல மாட்டேன். ஆனா போயிட்டு வந்து முதல் வேலையா வீட்டுல சொல்லிடுவேன். அதுவும் அப்பாகிட்ட சொல்றேனோ இல்லையோ அம்மாகிட்ட சொல்லிடுவேன். அவங்களும் 'ஏன் டா முதல்லயே சொல்லலை'ன்னு கேட்காம 'அப்படியா? நல்லா இருந்ததா'ன்னு கேட்டு போயிட்டே இருப்பாங்க :))

"ஏன் டா லேட்டு"
"சாரி சார் லேட்டாயிடுச்சு"

நானே ரொம்ப லேட்டா வியர்டு பதிவு போடறேன். இதுல யாரைக் கூப்பிடன்னு தெரியல. கிட்டத்தட்ட எல்லாருமே எழுதியிருப்பீங்க. அதனால எழுதாதவங்க எல்லாருக்கும் ஒரு ஓப்பன் இன்வெஸ்டிகேஷன்...ச்சே ஓப்பன் இன்விடேஷன். 'டிக்கெட் வாங்காதவங்க வாங்கிக்க'ன்னு நம்மூர் கண்டக்டர்லாம் கூவற மாதிரி 'இன்னும் வியர்டு பதிவு போடாதவங்க இன்விடேஷனை வாங்கிக்கோங்க' :)